articles

முடிவுக்கு வந்த சகாப்தம் சங்கரய்யா:

தோழர் என். சங்கரய்யா மறைவுக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (UCPI)-யின் மாநிலச் செயலாளர் எஸ். பாஸ்கரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (UCPI) தமிழ் மாநிலக் குழுவின்  சார்பில் ஆழ்ந்த துயரத்தையும், வேதனையையும் பகிர்ந்து கொள்கின்றோம். 

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஒரு தேசியவாதியாக, ஒரு பொதுவுடமைவாதியாக தனது பங்கினை ஆற்றி சிறை சென்ற மகத்தான தலைவரின் மரணத்தால் துயருற்றிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர்களுக்கும், தோழர் என். சங்கரய்யா அவர்களது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.

தோழர் என். சங்கரய்யா அவர்களின் மறைவால் தமிழ்நாட்டின் இடதுசாரி இயக்கங்களின் வரலாற்றில் மிகப்பெரிய சகாப்தம் முடிவுற்றதாக நாங்கள் கருதுகின்றோம். தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வை முன்னிறுத்தி போராடிய மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் முகத்தான் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதுடன் எமது கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் தாழப்பறக்கும் என தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

மறைந்த தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு செங்கொடி தாழ்த்தி வீர வணக்கம் செலுத்துகிறோம்” என்று இரங்கல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.